Ads

Thursday 18 August 2016

அரிக்கோட்டை அரசியல்

அரிக்கோட்டை அரசர் ராஜாதி ராஜ ராஜ கம்பீர அதி விக்ரம பூபதியின் நாடு பெரியதாக இல்லாவிட்டாலும், அவர் கீர்த்தி பெரியது. அவர் கொடை வள்ளல். அவர் எழுத்தறிவு இல்லாவிட்டாலும், புலவர்களை ஆதரிப்பவர். வங்கக் கடலை ஒட்டிய அந்த நாட்டில் புலிகள் இல்லை என்றாலும் ஏழை விவசாயிகளின் நிலங்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிப் புகழ் பெற்றவர்.

அரிக்கோட்டைக்குக் கடல் கடந்த வாணிகத்தில் பொன்னும் பொருளும் சேரவே அதைத் தொட்டற் போல் இருந்த நான்கு குறுநில மன்னர்களுக்கும் அரிக்கோட்டையின் மீது எப்போதுமே ஒரு பொறாமைக் கண் இருந்தது.

அவர்கள் நால்வரும் அரிக்கோட்டையின் மீது ஒருங்கிணைந்து போர் தொடுக்கத் தயாராகின்றனர் என்று ஒற்றர் படைத்தலைவன் கால்வளைந்த கார்க்கோடன் அரசரிடம் கூறினதும் அவர் என்ன செய்வது என்று திகைத்தார்.

அவர் படைப் பலம் பெரிது என்றாலும் அந்த நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்த போர் தொடுத்தால் ஈடு கொடுக்க முடியாது. போர் நிகழ்ந்தால்
அரிக்கோட்டைதான் நிச்சயம் தோல்வி அடையும்.

ஆகவே கவலையுற்ற அரசர் தனது மகா மந்திரி திவான் கல்லூர் இருசப்ப ராயரை அழைத்து “இந்த பிரச்சினைக்கு அடுத்த முன்று நாட்களுக்குள் நீங்கள்தான் ஏதாவது ஒரு வழி காண வேண்டும் ராயரே, இல்லாவிடில் நமது மக்கள் போரில் அழிந்து போவார்கள். உயிரும், பொன்னும், பொருளும் இழந்து நாடே சுடுகாடாகும்,” என்று ஆலோசனையைக் கேட்டார்.

பிறந்த நாள் பரிசு

மனோவுக்கு கலியாணம் ஆனபோது அவனுக்கு 26 வயசு. அம்மாதான் மீனாவை அவனுக்காகத் தேர்ந் தெடுத்தாள். அவள் அவனைவிட அஞ்சு வயசு குறைந்தவள். பணக்காரக் குடும்பத்துப் பெண். பார்க்க நல்ல அழகு. கொஞ்சம் வளர்த்தி அதிகம். அதனால் குண்டாக வாய்ப்பு அதிகம். அதெல்லாம் அம்மா கண்ணுக்குத் தெரியலை.

“அவளுக்கு என்னடா கொறவு? லட்சணமா இருக்கா. பவுன் கலரு. கொஞ்சம் வளர்த்தி கூடத்தான். ஆனா என்னா? அவ ரெண்டு பெத்துகிட்டா உடம்பு இறங்கிடும். அதனால வேண்டான்னு சொல்லாத, அவள் அப்பன் சொத்துமூணு தலமுறைக்கு வரும். அதில பாதி அவளுக்குத்தான், அவ தம்பிக்கு இப்பதான் பதினாலு வயசு ஆவுது” என்று அவர்கள் பெண் பார்க்கப் போனது அம்மா சொன்னாள்.

அவனும் சரியென்று தலையை ஆட்டிவிட்டான்.
அப்படித்தான் மீனா மருமகளாக வந்தாள். அம்மாவை மிக்க மரியாதையுடன் நடத்தினாள். அம்மாவுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ‘ராசாத்தி நல்லா இருடி எங்கண்ணு’ என்று உச்சி மோந்து அம்மா கிராமத்துக்குத் திரும்பி விட்டாள். அவளுக்கு எப்போதுமே பட்டணத்தில் இருக்கப் பிடிக்காது.

ஆகவே மருமகள் வந்ததும் அவள் நிம்மதியாக வயலையும் தோப்பையும் கண்காணிக்கப் போய்விட்டாள்.

Ads